Month: July 2021

5 நொடி ஒழுக்கம்.

நாம் அனைவருமே ஹாலிவுட் படங்களை பார்ப்பது உண்டு. அதில் சூப்பர் பவர் கொண்ட கதாநாயகர்கள் நடிக்கிறார்கள். ஒரு முறை யோசித்து பாருங்கள்! எங்களிற்கு ஒரு சூப்பர் பவர் கிடைத்தால் எப்படி இருக்கும்?

இந்த ஐந்து நொடி ஒழுக்கம் என்பது உங்களுக்கு ஒரு மிக பெரிய சூப்பர் பவரை தருவதற்கான ஒரு வழிமுறையாக அமைந்திருக்கப் போகின்றது. இதை கண்டுபிடித்தவர் யார்? அதை எவ்வாறு கண்டுபிடித்தார்? என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்த சூப்பர் பவரை நாம் எங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை முதலில் பார்ப்போம் வாருங்கள்.

இந்த சூப்பர் பவரை உங்களுக்குத் தரப் போவதும் ஒரு மிகப் பெரிய ஞானி .அவர் யார் தெரியுமா? பக்கத்தில் இருக்கின்ற தொலைபேசியை எடுத்துக்கொள்ளுங்கள்! அதில் கேமராவை ஓப்பன் பண்ணுங்கள்! Front Cameraவை ஓப்பன் பண்ணுங்கள் இப்போது யார் தெரிகின்றார் அதில்? ஆம் நீங்கள் தான் உங்களுடைய ஞானி. உங்களிற்கு இந்த சூப்பர் பவரை கொடுக்கப் போவது நீங்கள் தான். ஆச்சரியமாக இருக்கின்றதா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்

அதைப் பார்ப்பதற்கு முன்பாக உங்களிடம் ஒரு கேள்வி. 5,4,3,2,1…

கேள்வி என்னவென்றால் உங்களுடைய வாகனத்தில், காராக இருக்கட்டும் பைக்காக இருக்கட்டும் சைக்கிள்ளாக இருக்கட்டும் அதற்குள் ஒரு பிரேக் இருக்கின்றது! இந்த பிரேக் என்ன தொழிற்பாட்டை செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிக்கூடத்தின் அதிபர் வகுப்பறையில் கேட்கின்றார். அவ்வாறு அவர் கேட்கும் பொழுது அங்கு இருக்கின்ற ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் அனைவருமே சொல்லுகின்றார்கள் வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்காக இந்த பிரேக் இருக்கின்றது என்று சொல்கின்றார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து சொல்லுகின்றான் வாகனத்தின் வேகத்தை கூட்டுவதற்காக இந்த பிரேக் இருக்கின்றது என்று சொல்லுகின்றார். அதிபர் சொல்லுகின்றார் மிகச் சரியான விடை இதுதான். மிகச் சரியான விடை. வாகனத்தில் பிரேக் இருக்கின்றது என்ற தைரியத்தில்தான் வாகனத்தை மிக வேகமாக ஓட்ட முடிகிறது. எவ்வளவு வேகமாக ஓடினாலும் வாகனத்தை நிறுத்த முடியும் என்கின்ற நம்பிக்கைதான், எமக்கு வாகனத்தை ஓட்டுவதற்கான தைரியத்தைக் கொடுக்கிறது. அதேபோன்றுதான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பயணத்தை வேகமாக செய்ய வேண்டும் என்றால், உங்களுடைய வாழ்க்கையை தேவையான இடத்தில் நிப்பாட்டுவதற்கான பிரேக் உங்களுடைய கையில் இருக்க வேண்டும். உங்களுடைய கையில் அந்த பிரேக் இருக்கின்றதா? அந்த பிரேக்காக தான் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் அமைந்து இருக்கப்போகின்றது.

மிக இலகுவான செயல்பாடுதான். எப்படி செய்ய வேண்டும் என்றால், நீங்கள் ஒரு காரியத்தை செய்யப் போகிறீர்கள் என்று நினைத்தீர்கள் என்றால்,

5,4,3,2,1… என்று மிக வேகமாக சொல்லிவிட்டு அந்த காரியத்தை செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அந்த காரியத்தை மிகத் தெளிவாக செய்து முடிப்பீர்கள். ஏன் இந்த இலக்கத்தைச் சொல்ல வேண்டுமென்றால், சில நாட்களில் உங்களுக்கு மிக அலுப்பாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் கடினமாக ஒரு வேலையை செய்து விட்டு வந்து கதிரையில் அமரும் போது, தண்ணீர்த் தாகம் எடுக்கின்றது. எழுந்து சென்று தண்ணீர் குடிப்பதற்கு சோம்பலாக இருக்கின்றது. உங்களுடைய மனது சொல்லுகின்றது, “நீ கடினமாக உழைத்து இருக்கின்றாய். எழுந்து சென்று தண்ணீர் குடிப்பதை விட, படுத்து நித்திரை கொள்ளு!” என்று சொல்கின்றது.

உங்களுடைய உள்ளுணர்வு சொல்லுகின்றது, உடலுக்கு தாகம் ஏற்படுகின்றது தண்ணீர் குடி! என்று சொல்கின்றது. இப்போது மனம் சொல்வதைக் கேட்பதா? உள்ளுணர்வு சொல்வதை கேட்பதா? இரண்டுமே சரியானதுதான். ஆனால் எது மிகச் சரியானது என்பதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது என்பது, உடல் ஆரோக்கியத்திற்கானது, ஆகவே அதைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், மனதுக்கு ஒரு ஐந்து நொடி பிரேக் போட முடிந்தால், அந்த ஐந்து நொடியில் நீங்கள் உங்களுடைய தாகத்தை தீர்த்து விடுவீர்கள். அந்த ஐந்து நொடி பிரேக் போடுவதற்கு தான், இந்த ஐந்து நொடி ஒழுக்கம் பயன்படுகின்றது. எவ்வாறு செய்யலாம்?
5,4,3,2,1… என்று இலக்கத்தை எண்ணி

உடனடியாக ஒன்று என்று சொல்லி முடிக்கும் பொழுது நீங்கள் கதிரையில் இருந்து எழுந்தீர்கள் என்றால், அதே வேகத்தில் நீங்கள் சென்று தண்ணீரை குடித்துவிட்டு வந்து அமர முடியும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும் நான் சாதாரணமாக எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் என்னால் எழுந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு 5 லிருந்து 1 வரை எண்ணினால் மட்டும் என்னால் எழுந்து கொள்ள முடியுமா என்று ஒரு சந்தேகம் ஏற்படும்? இதற்குத்தான் இந்த ஐந்து நொடி ஒழுக்கத்தை உருவாக்கிய Mel Robbins சொல்லுகின்றார்.

தான் 41 வயது வரை மிகவும் கடினமான ஒரு வாழ்க்கையிலிருந்தேன், போதைக்கு அடிமையாகி, உடல் பருமன் அடைந்தது, என் வியாபாரத்தில் நட்டங்கள் ஏற்பட்டது. வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த அந்த வேளையில், தான் ஒரு றாக்கட் ஏவுகணை எழுகின்ற செயல்பாட்டை பார்த்தேன். அதில் 5,4,3,2,1… என்று சொன்னவுடன் அந்த றாக்கட் மிக வேகமாக பறந்தது.

என் மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது நானும் இந்த றாக்கட்டை போன்று மிக வேகமாக செயல் பட்டால் எப்படி இருக்கும்? எனக்கும் ஒரு சக்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி ஏற்பட்டது. நான் மறுநாள் காலை எழுந்து கொள்வதற்கு முன்பாக 5,4,3,2,1… என்று சொல்லி என்னை நானே ஒரு றாக்கட் ஆக நினைத்துக்கொண்டு மிக வேகமாக எழுந்தேன், அதுவரையும் விடியற்காலையில் எழுந்து கொள்ள முடியாத எனக்கு அது ஒரு மிகப் பெரிய சக்தியைக் கொடுத்தது. நான் விடியற்காலையில் எழுந்து விட்டு, அதற்குப் பின்பாக ஒவ்வொரு செயல்பாடுகளை செய்யும் பொழுது ம் இவ்வாறு என்னை நானே ஒரு றாக்கட் ஆக நினைத்து 5 லிருந்து 1 வரை எண்ணி நான் செயல்பட்டேன்.

என் செயல்கள் அனைத்தும் வெற்றி அளித்தது. ஒரு சில மாதங்களிலேயே என் போதைப்பழக்கம் விட்டுப் போனது. உடல் பருமன் குறைந்து. வியாபாரத்திலும் நல்ல வெற்றி கிடைத்தது. நான் இன்று நல்ல ஒரு வாழ்க்கை நிலையில் இருக்கின்றேன், என்று சொல்கின்றார். ஏன் இவ்வாறு நடக்கின்றது என்றால் 5 லிருந்து 1 வரை எண்ணும்பொழுது, அதற்குப் பின்பு எண்ணுவதற்கு எந்த இலக்கமும் கிடையாது.

0 உடன் இலக்கங்கள் மனதில் முடிந்துவிடுகின்றன. ஆகவே இதற்குப் பின்பு இயங்குவதைத் தவிர வேறு வழியில்லை. எழுந்து கொள்ள வேண்டும் என்கின்ற கட்டாயம் உங்கள் மனதில் ஏற்படுகின்றது. அந்த இடத்தில் நீங்கள் உடனடியாக எழுந்து கொள்கின்றீர்கள். அதுமட்டுமில்லாமல், 5,4,3,2,1… என்று சொல்லும் பொழுதே, ஒரு சிறிய அழுத்தத்தைச் சேர்த்து நீங்கள் சொல்லிக் கொண்டு வரும் பொழுது, அந்த வேகம், உங்களை இலக்கம் ஒன்று சொல்லும் பொழுதே இயங்க வைக்கின்றது. அதனால் நீங்கள் மிக வேகமாக உடலில் ஒரு அசைவு ஏற்படுத்துகின்றீர்கள். உடனடியாக உங்களுக்கு ஒரு Motivation கிடைக்கின்றது. அந்த சக்திதான் உங்களை அடுத்த காரியத்தை செய்ய வைக்கின்றது. படிக்க விரும்பினால் படிக்கலாம், வேலை செய்ய விரும்பினால் வேலை செய்யலாம், எதை செய்ய விரும்புகின்றீர்களோ அதை செய்வதற்கான தைரியத்தையும் சக்தியையும் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் உங்களுக்கு கொடுக்கின்றது. இது உலகத்தில் இருக்கின்ற பலரால் கையாளப்பட்டு, தங்கள் வாழ்க்கையில் வெற்றி அளித்த ஒரு முறையாக பலரும் தங்கள் வெற்றிப் பயணத்தில் பதிவேற்றி வருகின்றார்கள். நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையின் வெற்றி பயணத்தில் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது?


சிந்தனை & எழுத்து,
சி.சிவவினோபன்

கையாலாகாத கணவனுக்காக சத்தியத்தை மீறிய தாதி

சன நடமாட்டமற்ற நிலையில் வீதி வெறிச்சோடி கிடந்தது. மதிவதனியை அணைத்தபடி மணிவண்ணன் கார் பின் சீட்டில் அமர்ந்திருந்தான். மணியண்ணன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். எதிரில் போலீஸ் வண்டி இவர்களை மறித்தது. “ஊரடங்கு வேளையில் எங்கே போகின்றீர்கள்? கீழே இறங்குங்கள்.” அதிகாரமாக கட்டளையிட்டார் போலீஸ்காரர். மணி அண்ணன் கீழே இறங்கி “ஐயா பிள்ளைத்தாச்சி பொண்ணு வலியில் துடிக்குது, அவசரமா ஆஸ்பத்திரிக்கு போறம்.” மணியண்ணன் சொல்லி முடிக்க முதலே “சரி சரி போங்க போங்க” என்று போக அனுமதித்தார் அந்த போலீஸ்காரர்

அவர்கள் வேகமாக ஆஸ்பத்திரியினுள் நுழைந்த போது ஆஸ்பத்திரியே ஆள் அரவமற்று இருந்தது. யார் என்னவென்று கேட்க ஆளில்லாததால், மணிவண்ணன் மதிவதனியை நேரே பிரசவ வார்டுக்கே கொண்டு வந்து சேர்த்து விட்டான். மனைவி படும் வேதனையைப் பார்த்து தாங்க முடியாது மணிவண்ணன், குதிரை வேகத்தில் தன் வேகத்தை கூட்டி மனைவியை அழைத்து வந்து விட்டான். வந்துதான் என்னபலன் அவனுடைய மனைவியை கவனிக்க அங்கு யாரும் இல்லையே! என்ன செய்வது என தெரியாமல் புழுவாகத் துடித்தான்.

அங்கும் இங்கும் ஓடி ஓடி, யாராவது மருத்துவர்களோ தாதிமார்களோ தென்படுகின்றனரா என பார்த்தான். மணி அண்ணன் இவ்விடத்திலே அனுபவசாலி. அடிக்கடி நோயாளிகளை வைத்தியசாலையில் கொண்டு வந்து சேர்ப்பவராதலால், வைத்தியசாலையில் வேலை செய்பவர்களை ஓரளவு தெரிந்து வைத்திருந்தார். ஆதலால் மணி அண்ணன் சிவில் உடையில் ஒரு தாதியை தேடி கூட்டி வந்தார். “அண்ணா இவ இந்த ஆஸ்பத்திரியில் தான் தாதியா வேலை செய்கின்றார், வதனி அக்காவுக்கு உதவி செய்ய கூட்டி வந்து இருக்கின்றேன்” மணி அண்ணன் கூறி முடிக்க முதலிலேயே “ஐயையோ அதெல்லாம் முடியாது வேலைநிறுத்த போராட்டம் நடக்குது ,ஊழியர்கள் யாரும் வேலை செய்வதில்லை என சத்தியம் செய்யாத குறையாக சபதம் எடுத்துள்ளோம். அது தெரியும் தானே உங்களுக்கு?” என்று சொல்லிய வண்ணம் அவ்விடத்தை விட்டகல முயன்றாள். தயவுசெய்து மிஸ் எப்படியும் இந்த உதவி செய்யுங்கோ. என்று கையெடுத்து கும்பிட்டான் மணிவண்ணன்.

முடியாது எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் வேலை செய்ய மாட்டோம். உறுதியாக தாதி கூறிய போது அவளின் காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்டு கெஞ்சி கேட்டான், அந்த பாசமிகு கணவன். “ஆ ஐயோ அம்மா” மனைவியின் அலறல் சத்தம் அவனை வதைத்தது மனைவிக்கு எந்த உதவியும் செய்ய முடியாத கையாலாகாத கணவனாக அவன் நின்று கொண்டிருந்தான். நீந்தத் தெரியாத ஒருவன் நட்டாற்றில் தத்தளிக்கும் போது கையில் கிடைத்த மரக்கிளையை பற்றி பிடிப்பது போன்ற நிலையில் தாதியின் காலை பிடித்து கெஞ்சிக்கொண்டே இருந்தான்.

அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் அந்த தாதியின் மனத்தை இழக வைத்தாலும், அந்தக் கணவனின் கெஞ்சல் தாதியின் மனதை உருக வைத்து விட்டது. அவள் உடனடியாக செயல்படத் தொடங்கிவிட்டாள். மருத்துவத் தாதி செய்யும் வேலையை, சாதாரணமான தாதி அவள் செய்யும் போது மிகவும் சிரமப்பட்டாள். பிரசவமும் மிகவும் சிக்கலாக இருந்தது. குழந்தை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம், அழுவதை நிறுத்திவிட்டு குழந்தை வெளியே வருவதற்கு ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டாள் அந்தத் தாதி, அந்தப் பெண் அலறுவதை நிப்பாட்டியது மட்டுமல்லாமல், மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.

செய்வதறியாது திகைத்த தாதி, போதிய அனுபவம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டாள். ஆண்டவனை நினைத்து மன்றாடிய வண்ணம் தனது முழு முயற்சியையும் கொடுத்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்படடாள். வெளியிலே மனைவியின் கதறல் சத்தம் கேட்க கேட்க தீயில் விழுந்த புழுவாக மணிவண்ணன் துடித்துக் கொண்டிருந்தான். திடீரென அலறல் சத்தம் நின்றது.

அவனது இதயம் ஒரு நிமிடம் துடிப்பை நிறுத்தியது போல் உணர்ந்தான். என் மனைவிக்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்று கைகளை பிசைந்து கொண்டான். தன்னையே நம்பிய தன் மனைவிக்கு உதவ முடியாத தனது கையாலாகாத தனத்தை எண்ணி கடவுளே கடவுளே என அலறினான். மனிதன் இயலாமையின் போது கடவுளிடம் சரணடைவது சகஜம்தானே மணிவண்ணனும் கைகுவித்து கும்பிட்டு கடவுளிடம் கேட்டு மன்றாடிக்கொண்டிருக்கும் போது தான், பிறந்த குழந்தை அழும் சத்தம் கேட்டது.

கடவுளே நன்றி! என்று திரும்பவும் கைகுவித்தான். பெரும் சிரமத்தின் பின் குழந்தையை வெளியில் எடுத்தாள். குழந்தையை குளிக்க வைத்து, உரிய இடத்தில் படுக்க வைத்த பின், தாய்க்கான மருந்தை ஊசி மூலம் ஏற்றி தாய்க்கான சிகிச்சையையும் சரிவரச் செய்து முடித்தாள். வெளியே வந்த தாதி உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றாள். நான் பார்க்கலாமா? என மணிவண்ணன் கேட்ட போது சிறிது நேரம் பொறுங்கோ என திரும்பவும் உள்ளே சென்றுவிட்டாள்.

தாதியின் மனதில் இனம் தெரியாத உணர்வுகள் போதிய அனுபவம் இல்லாமல், பிரசவம் பார்த்தது, குழந்தை வெளிவரும் சமயத்தில் தாய் மயங்கியது, பெருத்த சிரமத்துடன் குழந்தையை வெளியில் எடுத்தது தாய்க்கான மருந்தைக் கொடுத்து தாயையும் சேயையும் சுகமாக வைத்திருப்பது எல்லாம் தன்னுடைய வெற்றி தான், ஆனாலும் சுகாதார ஊழியர்களின் சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை மீறியது அவர்களுக்கு கொடுத்த சத்திய வாக்கை மீறி நோயாளியை காப்பாற்றியது அத்தோடு அவளிற்குரிய வேலை இடம் இல்லாத இடத்தில் அனுமதி இன்றி நுழைந்து வேலை செய்தது, என அவள் செய்த பிழைகள் அதிகம் உள்ளது. இருந்தாலும் இரண்டு உயிர்களை காப்பாற்றி விட்டேன், இன்னும் ஐந்து நிமிடங்கள் பிந்தி இருந்தால், ஒரு உயிர் அல்ல இரண்டு உயிர்களும் போயிருக்கும். அந்தக் கணவனும் வேதனையில் துடித்து இருப்பான். மனசாட்சிப்படி நான் செய்ததுதான் சரி என நிம்மதியான தாதி, தாயையும் சேயையும் சாதாரண வார்ட்டுக்கு இடம் மாற்றி, கணவனிடம் ஒப்படைத்தபின், அவள் தன இருப்பிடம் நோக்கிச் சென்றால்.

காலத்தினால் செய்த “உதவி சிறிதெனினும்” “நன்றி சிறிதெனினும்” ஞாலத்தின் மாணப் பெரிது.


எழுத்து,
மங்கை அரசி.