பாதம் தேடும் சோகப்பந்து.
பாதம் தேடும் சோகப்பந்து.
பாதங்கள் இல்லாமல் நான் பறப்பேன், குதிப்பேன், உருண்டு உருண்டு உலகையே அளப்பேன். அத்தனை வல்லமையுள்ள நான் தான் உங்கள் பழைய நண்பன் பந்து. என்னை ஒரு முறை பாருங்கள், என் கதையை சிறு கணம் கேளுங்கள். பாவம் நான் இப்போது படுத்துள்ள இடம் பாழடைந்த பயங்கர பேய் வீடு போலுண்டு. தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்.

புதிதாய் பிறந்த குழந்தை நான். என் வயது இரண்டே மாதம் தான். இருப்பினும் இப்போது பராமரிப்பின்றி, பழைய பொருட்களுடன் எறியப்பட்டுள்ளேன். இதற்கெல்லாம் ஒரே ஒருவன் தான் காரணம், அவன் தான் என் எதிரி. அந்த கொடிய அரக்கன் என் வாழ்வில் எப்படி விளையாடினான் தெரியுமா? விளையாடப் பிறந்தவன் நான் என் வாழ்க்கையிலேயே விளையாடிவிட்டனர். கண்டியில் வசிக்கும் என் தந்தை இறப்பர் மரத்திற்கும், சீனாவில் உள்ள என் தாய் கூமா நிறுவனத்திற்கும் மகனாகப் பிறந்தேன் நான். என் பிறப்பின் பாதையே அத்தனை கொடுமையாய் இருந்தது. என் தந்தையில் இருந்து நான் உருவாகுவதற்காக கண்டிப் பிரதேசத்தில் வசிக்கும் முருகையாவும் அவரின் குடும்பமும் இரவு பகலாய்ப் பாடுபட்டனர். என் தந்தை இறப்பர் மரத்தை அழகாகப் பாதுகாத்து, மழை நீர் உட்செல்லாமல் அடைத்து, மறைப்புப் போட்டு என்னைப் பாதுகாப்பாக பிரசவம் பார்த்து இறப்பர்ப் பாலாக வெளியெடுத்தனர். அதன் பின் என்னை வடிகட்டி குளிப்பாட்டி நொதியம் எல்லாம் சேர்த்து கொதிக்க வைத்து என்னை உறுதியான இறப்பர்ப் பட்டையாக மாற்ற, நானும் அனைத்திற்கும் இணங்கி நல்ல பிள்ளையாக சொன்னபடி நடக்க சிறந்த விலையுயர்ந்த தரமான இறப்பர் படிவமாக மாறினேன். இருப்பினும் சீனாவில் இருந்து வந்த வர்த்தக வியாபாரிகள், முருகையாவின் குடும்ப சூழ்நிலையை அடிப்படையாக வைத்து, அவரின் ஒரெ ஒரு பெண்குழந்தை மாலினியின் உயர்படிப்பிற்குத் தேவையான பணத்தை மட்டும் கொடுத்து, என்னை அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சென்றனர். மகள் மாலினி படித்தால், அவளாவது நல்ல வாழ்க்கை வாழ்வாள் என்று எண்ணி, வந்த வரை இலாபம் என்று பெற்றுக் கொண்டு என்னைக் கொடுத்து அனுப்பினார் முருகையா. தந்தையில் இருந்து பிரசவித்த நான் இப்போது தாய் வயிற்றுக்குள் செல்கின்றேன். சீனா நிறுவனம் என்னைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று என் தாய் நிறுவனத்தின் இயந்திரம் என்ற வயிற்றிற்குள் செலுத்த, அங்கு நான் உருளையாக உருவம் பெற்று புதிய பிறவி எடுக்கின்றேன். அப்போது இயந்திரத்தின் கண்ணாடி வழியே எட்டி வெளியே பார்க்கின்றேன் அங்கு சீனா மக்கள் ஒரு பிள்ளை பெற மட்டுமே அனுமதி உண்டு. அதே நேரம் பத்து மணிநேரம் உழைத்தாலும் மூன்று தலையின் வாழ்வாதரத்தைக் காப்பாற்றக் கூட போதிய ஊதியம் கிடைக்காது என்பதே அவர்களின் சோகம். இவ்வாறு மனிதர்களின் சோகக் கண்ணீர் கலந்தே நான் உருவாகின்றேன். என்னடா வாழ்க்கை இது என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் நேரத்தில் அந்த இயந்திர வயிறு என்னைத் தூக்கி வெளியே எறிந்தது, நானும் பாய்ந்து சென்று ஒரு சுவரில் மோதி தெறித்து வந்து ஒரு கூடையில் வீழ்ந்தேன். நான் வீழ்கின்ற கூடையின் தூரத்தைப் பொறுத்தே என் தராதரம் நிர்ணயிக்கப்படுமாம். நான் தரம் கூடிய முதலாம் இடத்தில் வீழ்ந்ததால் 95$ என்ற விலை முத்திரை குத்தப்பட்டு அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றேன். அங்கு ஒரு தந்தை ஊரில் உள்ள தன் மகனைப் பார்ப்பதற்காக, ஆசையாய் என்னை வாங்கிக்கொண்டு 22 மணித்தியாலப் பயணத்தில் கண்டிக்குச் செல்கின்றார்.

வீட்டிற்கு முன் சென்றவுடன் என்னை எடுத்து தனக்குப் பின் ஒழித்த அத் தந்தை, மகனுக்காகக் காத்து நின்றார். அங்கு வந்த மகனிற்கு தன் தந்தையை அடையாளமே தெரியவில்லை. மகன் பிறந்து மூன்று வருடத்தில் இப்போது தான் முதன் முறையாக நேரில்ச் சந்திக்கின்றனர். இதுவரையும் அனைத்து அன்பையும் கணனித் திரை முன் காட்டிய மகனிற்கு, கண் முன் நிற்கும் தந்தையை கட்டிக்கொள்ளத் தெரியவில்லை. வெட்கத்தில் ஓடிவராத மகனை நோக்கி என்னை உதைத்தனுப்பினார் தந்தை. என்னைப் பார்த்த மகன் துரத்திப் பிடித்து விளையாட, தந்தைக்கும் மகனிற்குமிடையில் அழகான உறவுப் பாலமானேன் நான். ஆனால் அந்த அழகான தருணங்கள் அதிக நாட்கள் நீடிக்கப் போவதில்லை என்பது எனக்கு அப்போது தெரியாமல்ப் போனது. இவ்வாறே ஒரு வாரம் உருண்டோடியது. அன்றொரு நாள் என்னோடு விளையாடிக்கொண்டு இருந்த மகனிற்கு அன்புத் தந்தை இன்னுமோர் பரிசையும் வாங்கி வந்தார். நாளைமறுநாள் மீண்டும் அமெரிக்கா செல்லவுள்ள தந்தை, தன் மகனின் முகத்தில் சோகம் வரக்கூடாது என்பதற்காகவும் அதே தருணம் தினமும் தன் மகனைப் பார்த்துக் கதைக்க மிடுக்குத் தொலைபேசி ஒன்றை வாங்கிப் பரிசளிக்க, என் வில்லனின் வரவு அங்கே ஆரம்பம் ஆகின்றது. அவன் எனக்கு மட்டும் வில்லன் அல்ல, மொத்தக் குடும்பத்திற்கும் எமனானான். வாங்கிக் கொடுத்த தந்தை மறுநாள் மகனை விட்டுப் பிரிந்து அமெரிக்கா செல்ல அவர் எதிர்பார்த்தாற் போல் மகனும் புது தொலைபேசி கிடைத்த புதினத்தில் அழவே மறந்து ஆனந்தமாய் அனுப்பிவைத்தான். அமெரிக்கா சென்ற தந்தை உடனடியாக முகம் பார்த்துக் கதைக்கும் அழைப்பை எடுத்தார். மகன் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் வேளையில் அழைப்பு வரவே, அதை எடுத்து தந்தையைப் பார்த்துப் பேசிக்கொண்டே வீதியில் நடை போட்டான் மகன். வேகமாக வந்த பாரவூர்தி விரைந்து நிறுத்தமுடியாத காரணத்தால், நெருங்கி வந்து இடித்தது. மகன் பறந்து சென்று தரையில் விழ, தலை தார்த் தெருவில்ப் பட்டதும் உயிர் பிரியும் மகனை தான் வாங்கிக் கொடுத்த தொலைபேசியில் பார்த்த தந்தை சித்த சுகவீனம் உற்றவராகின்றார். பயனில்லா தொழிலாளி இனி இங்கு வேண்டாம் என்று அவரை நாட்டிற்குத் திருப்ப, குடும்பமே உருக்குலைந்து போனது. இரண்டு மாதம் கழிந்த பின் மகனில்லாத் தாய், மனநிலை சரியில்லாக் கணவன் என்று ஏற்க முடியாத் துயர் இருப்பினும், குடும்பம் நடத்த வேண்டுமே என்று திருமணத்திற்கு முன் தன் தந்தை தந்த நல்ல கல்வி அறிவில் பள்ளிபடிப்பை முடித்து, காதல்த் திருமணத்தில் பெற்றோரை எதிர்த்து வெளியெ வந்து குடும்பத்தைத் தொடங்கிய மாலினி, அன்று தந்தை தந்த அந்த அறிவை வைத்து சிறுவர் பள்ளியில் ஆசிரியர் வேலை செய்து, பிள்ளை இல்லாக் குறையையும், குடும்பதிற்கு காசு இல்லாக் குறையையும் நிவர்த்தி செய்து வருகின்றாள். அவர்கள் இருக்கும் வாடகை வீட்டில் பழைய பொருட்கள் போடும் அறையில் என்னை எறிய மனமில்லாமல் போட்டு வைத்துள்ளாள் மாளினி.

என் கதை கேட்கும் நீங்களேனும் உங்கள் வாழ்க்கையில் என்னைப் போன்று இன்னுமோர் பாதம் தேடும் சோகப் பந்தை உருவாக்கி விடாதீர்கள், என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.இப்படிக்குசிந்தனை சிவவினோபன்.