MangayArasi

பிரிவிற்கு வந்த பிரிவு.

இருட்டு உலகத்தில் இருந்து, ஒளியுலகை எட்டிப் பார்த்த ஈஸ்வரி, மிரள மிரள விளித்தாள். எங்கு போவது என்ன செய்வது என்றே ஈஸ்வரிக்குத் தெரியவில்லை. ஆனால் அவளை அழைத்துச் செல்ல மகளிர் நலன்புரிச் சங்கத்தினர் வந்திருந்தனர். அவர்களுடன் சென்ற ஈஸ்வரிக்கு எப்படி அவளை அடையாளம் கண்டு கொண்டனர், ஏன் அழைத்து செல்கின்றனர், என்னும் வினாக்கள் வந்து முட்டி நின்றன. மகளிர் இல்லத்திற்குள் சென்ற பின்பு, தலைவி அதற்கான விடையை ஈஸ்வரி கேட்காமலே கூறியிருந்தார். சிறையில் ஈஸ்வரியின் நன்னடத்தை காரணமாகவும், போக்கிடம் இல்லாதவளான அவளது நிலைமையையும், சிறை நிர்வாகம் எடுத்துக் கூறியதனால் தான், மகளிர் அமைப்பு அவளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.


மகளிர் விடுதியில் அவளுக்கான இருப்பிடம் காண்பிக்கப்பட்டது. அங்கிருந்த கண்ணாடியில் தன்னை நோக்கிய ஈஸ்வரி திகைத்து விட்டாள். வயதான ஒரு மூதாட்டியின் உருவத்தை கண்ணாடி காட்டியது. காலத்தை பின்னோக்கிப் பார்த்தாள். ஒரு அழகான இளம் பெண்ணான, ஆடல் பாடலில் சிறந்து விளங்கிய ஈஸ்வரி, தாயாருடன் சேர்ந்து வீதியில் பாட்டு பாடி பிழைப்பு நடத்தி வந்தாள். நன்றாகவே போய்க்கொண்டிருந்த அவளது வாழ்க்கையில், திடீரென ஏற்பட்ட தாயாரின் மரணம், அவளை நிலைகுலைய வைத்து விட்டது. “அம்மா அம்மா” என அழுது புலம்பினாள்.”நீ இல்லாமல் எப்படி வாழ்வேன் அம்மா என கதறி துடித்தாள்.” தனியாக நான் வாழ்வது என்றால் வரும் தொல்லைகளை எப்படி சமாளிப்பேன்? என பயந்தாள். அவள் பயந்தது போலவே காமக் கழுகுகளும் அவளை வட்டமிடத் தொடங்கின.
அந்த நேரத்தில் அவளுக்குத் துணையாக வந்தவன் தான் நடராசன். அவன் வாழ்க்கைத் துணையும் ஆகிவிட்டான். நடராசனும் ஈஸ்வரியும் ஒரு கோவிலில் நடத்தப்பட்ட ஒரு இலவச திருமண நிகழ்வில், திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டனர். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திய இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தினர். அவர்களுடைய ஐந்து வருட இல்லற வாழ்வில், இரு முறை கர்ப்பம் தரித்தும், அவளால் முழுமையான ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. ஒருமுறை குழந்தை கருவிலேயே இறந்து பிறந்தது. இன்னொரு முறை கரு கலைந்து விட்டது. இந்த சோகமான நிகழ்வுகளுக்கு இடையிலும், நடராசனிடமிருந்து ஈஸ்வரிக்கு அன்பும் பாசமும் முழுமையான காதலும் நிறைவாகவே கிடைத்தது.


சிறு சிறு சலசலப்புக்கள் இருந்தாலும், வாழ்க்கை ஒரு சுகமான தென்றல் ஆகவே சென்றது. ஆனால் எங்கிருந்தோ வந்த புயல் அவர்களது வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விட்டது. ஒரு காமக்கொடூரனின் கண்களில் ஈஸ்வரியின் இளமை அழகு தென்பட்டுவிட்டது. தப்பான எண்ணத்தோடு தனியே இருந்த அவளை அணுகிய அவனிடம், இருந்து தன்னை காப்பாற்ற அவள் போராட வேண்டி இருந்தது. போராட்டத்தின் முடிவில் அவள் தோற்றுப் போகும் நிலையே ஏற்பட்டது. அந்த நேரம் அங்கு வந்த நடராசன் கையில் கிடைத்த இரும்பு கம்பியால், அந்த கயவனின் தலையில் அடிக்க, அவன் சுருண்டு விழுந்தான். ஈஸ்வரி தப்பி விட்டாள் ஆனால் வந்தவன் இறந்து விட்டான்.


பின்பு நடந்ததெல்லாம் அவர்கள் கனவில் கூட எண்ணிப் பார்க்காதவை. போலீஸ் விசாரணை, மரண விசாரணை என அனைத்து விசாரணைகளின் பின்பு, பணம் பறிக்கும் நோக்கத்தில் அந்த மனிதனை நடராசன் கொலை செய்துவிட்டான், என்று வழக்கு தாக்கல் செய்துவிட்டனர். அதிகம் படிக்காத, பயந்த சுபாவம் உள்ள நடராசனும், ஈஸ்வரியும் செய்வதறியாது திகைத்தனர். வழக்கில், விசாரணையின் போது, “இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றது உனது கணவன் தானே?” என ஈஸ்வரியிடம் கேட்டனர். “ஆம்” என ஈஸ்வரி சொன்னபோதும், ஏன் அப்படிச் செய்தான்? என விசாரணை அதிகாரிகள் கேட்கவில்லை. தன்னுடைய மானம் காக்கவே, தன் கணவன் அப்படி நடந்து கொண்டான். என அவள் சொல்ல நினைத்தாள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு வழங்கப்படவில்லை. நடராசனிடமும் “நீ கம்பியால் அடித்ததனால் தானே அந்த மனிதன் இறந்தான்?” எனக் கேட்கப்பட்டதே ஒழிய, ஏன் என்னும் கேள்வி எழவே இல்லை. ஏன் அப்படிச் செய்தான் எனக் கூற, அவனுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.


நடராசனுக்கு கொலைக்கான தண்டனையாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விபரீதத்தை உணர்ந்து கொண்ட ஈஸ்வரி, தன்னுடைய கணவனுக்கு கொலை செய்ய உதவி புரிந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாள். அவளுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 25 வயதில் சிறைக்குச் சென்ற ஈஸ்வரி, 55 வயதில் வெளியுலகை பார்க்க வந்துவிட்டாள். ஆனால் அவள் கணவனின் நிலை என்ன என எண்ணி, வேதனைபட்டாள். தன்னுடைய நிலமையை, மகளிர் சங்கத் தலைவியிடம் கூறி, உதவி கூறி அழுதாள். அவர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஒன்பது மாத முடிவில் நடராசனுக்கும் விடுதலை கிடைத்தது.

30 வயதில் சிறைக்குச் சென்றவன், 61 வயதில் வெளியில் வந்தான். நடராசனும், ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உருவம் தான் முதுமை அடைந்திருந்தாலும், உள்ளத்தில் அன்பு ஊற்றெடுத்த வண்ணம் இருந்தது. முதுமை தன் முகவரியை முகம் முழுக்க தெளித்து இருந்தது. தலையில் நரை கூடி இருந்தது. உடல் கிழப் பருவம் அடைந்திருந்தது. உள்ளம் மட்டும் இளமையுடன் விழித்திருந்தது. ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த அந்த அன்பு, ஊற்று நீர் என பெருக்கெடுத்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் கனிவுடன் பார்த்த வண்ணம் இருந்தனர். ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. மௌன மொழி என்பது இதுதானோ? இரண்டு ஜோடி கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது, அழுதால் கொஞ்சம் நிம்மதி!” என்று கவிஞர் கண்ணதாசனின் வரிகள் அங்கே மயிலிறகாய் விரிந்தது.

எழுத்து,
மங்கை அரசி.

This image has an empty alt attribute; its file name is Mangai-Arasi-1-1024x1024.jpg

மூளையின் வேலை பற்றி மூளையின் ஒரு மூலையில்

மனிதனின் உடல் உறுப்புக்களில், மிகவும் அதிசயமான உறுப்பு மூளை. மூலையைப் பற்றி நாம் ஆய்வு செய்யும் பொது, மூலையைத் தான் பயன்படுத்தவேண்டி உள்ளது, என்பது ருசிகரமான தகவல் ஆகும்.

The young and conceptual image of a large stone in the shape of the human brain

இதயம் அதி முக்கியமான உறுப்பு என்பது வெளிப்படையான உண்மை. அதேபோல் மூளையும் ஒரு முக்கியமான உறுப்பு. மனிதனின் நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல், நடவடிக்கை என எல்லாவற்றையும் முறையாக ஒழுங்கமைப்பது மூளை தான்.

ஆண் மூளையில் மூன்று மையங்கள் உள்ளன. ஆனால் அது வேறு விதமாக செயல்படுகின்றது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதைப் போல ஆணால் விவரித்து கொஞ்சம் இழுத்து இழுத்து வழவழவென கூற முடியாது.

ஆண் பெண் இருவருக்கும் உடலமைப்பில் மட்டுமல்ல மனம், மூளை அமைப்பு வித்தியாசமாகத்தான் உள்ளது. இப்படியாக மூளை வித்தியாசப்படுவதனால் தான் ஆணை பெண்ணாலும், பெண்ணை ஆணாலும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. மின்சாரம் கூட இந்த மூளையில் உற்பத்தியாகுகின்றது, என்னும் உண்மையை தெரிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள்.

மனித மூளையின் நிறையில் 60% கொழுப்பால் ஆனது மூளைக்கு. வலி தெரியாது வலியை உணரும் வலிவாங்கிகள் அங்கு இல்லை மண்டை ஓட்டிற்குள் மூளை நகரும் போது அங்கு வலி உணரப்படுவதில்லை. மனிதன் விழித்திருக்கும் போதே மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். ஏனெனில் இங்கு வலி வாங்கிகள் இல்லாமல் இருப்பதினால் தான் இது சாத்தியமாக உள்ளது. மனிதனை மயக்க நிலையில் வைத்து மூளையில் அறுவை சிகிச்சை செய்வதில்லை. ஏனெனில் மனிதன் உணர்வுடன் இருக்கும் போது தான் மருத்துவர்களால் மூளையின் செயற்பாடுகளை அறிந்து கொண்டு திறம்பட செயற்பட முடியும். மூளையானது 25 வாட்ஸ் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது. ஒரு மின் விளக்கை எரியவைக்கும் அளவிற்கு மின்சாரத்தை மூளையால் உற்பத்தி செய்ய முடியும். எந்த விஷயமானாலும் மூளை சரியாக பார்க்கக் கூடியது. கண்கள் தலைகீழாகப் பதியும் பிம்பத்தை மூளை சீராக்கி எமக்கு தருகின்றது. மூளையின் அறிவிற்கும், அளவிற்கு சம்பந்தமே இல்லை. மூளை பெரிதாக இருந்தால் அறிவு அதிகமாக இருக்கும் என நினைப்பது தவறானது. மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் கிலோ மீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நரம்பு இழைகள் உந்து விசைகளை நமது உடலில் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவும்.

20 வயது நெருங்கும் பொழுது உடல் உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்ற போதும், மூளையின் வளர்ச்சி 40 வயது வரை வளர்ந்து கொண்டே இருக்கும். புதுப்புது விடயங்களை கற்றுக் கொள்ள முனையும் பொழுது மூளை அதை எந்நேரமும் ஏற்றுக் கொள்ளும்.

மூளையானது வெண்ணை போன்று கொழ கொழப்பான தன்மையுடன் இருக்கும் மனிதன் ஒரு நாளில் 70 ஆயிரத்திற்கு அதிகமான விஷயங்களை சிந்திக்கின்றான். ஒரே நேரத்தில் இரண்டு விடயங்களை மனிதனால் சிந்திக்க முடியும். தகவலானது மூளைக்குள் மணிக்கு 418 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் என கண்டறிந்துள்ளனர். மூளைக்கு ஓய்வில்லாமல் செயல்படும். மனிதன் உறங்கும் போது கூட, விழித்திருக்கும் போது செயல்படுவதை விட கூடுதலாக செயற்படும். மனித உடலின் நிறையில் இரண்டு சதவீத அளவிற்கு மூளை இருக்கும், ஆனால் மொத்த சக்தியின் 25% சக்தியை அது பயன்படுத்துகின்றது.

மூளையின் பாதி அளவு இருந்தாலும் கூட உயிர் வாழ முடியும். மூளையின் ஒரு பகுதி பழுதடைந்து விட்டாலும், செயல்படும் மறு பகுதி பழுதடைந்த பகுதி செய்தவற்றைக் கற்றுக்கொண்டு செயல்பட முடியும். மூளையின் செயல்பாடு வினாடிக்கு ஒரு லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகின்றது. பொருட்களை பற்றி சிந்தித்துக்கொண்டு பொருட்களை நினைவுப்படுத்திக் கொண்டு கம்ப்யூட்டரில் டைப் செய்யவும் முடியும். மூளையில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் இருந்த அளவில் முடிவி வரைக்கும் இருக்கும். சிலவேளை குறையலாம் ஆனால் அது கூடாது. கற்ப காலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் பின் தான் இயல்பு நிலைக்கு அடையும். ஒரு மனிதனின் வாழ்நாளில் மூளையானது ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகளை சேமிக்கும் அதாவது. குவாட் ட்ரில்லியன் இது ஒன்றுக்கு பின் 15 சைபர். மூளையின் உருவம் வளர்வதில்லை. குழந்தை பிறக்கும் போது இருந்த அளவு தான் முடிவு வரைக்கும். இதனால் தான் பிறந்த குழந்தையின் தலை உடலைவிட பெரிதாக இருக்கும்.

இந்த மூளையின் தகவலை உங்கள் மூளைக்கு வழங்கிய எந்தன் முயற்சி பிடித்திருந்தால், உங்கள் கருத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள். நன்றி.

நடைத் தெரப்பியும் பூமிச்சிகிச்சையும்.

சிகிச்சை என்பதோ தெரப்பி என்பதோ வைத்தியசாலைகளில் மட்டும் கொடுக்கப்படும் பயிற்சி அல்ல. நாம் நம் அன்றாட வாழ்க்கையில் முயற்சித்தால்,அனைத்து சிகிச்சைகளையும் இந்த இயற்கை எமக்காக வைத்துள்ளது என்பதை உணர முடியும், அத்தோடு அனுபவிக்கவும் முடியும். உதாரணத்திற்கு 

வெறும் காலுடன் நிலத்தில் நாம் நடக்கும் போது பூமியின் இயற்கை ஆற்றலை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாயுள்ளது புற்கள் நிறைந்த நிலம் மணல் தரை சிறு கற்கள் உள்ள நிலம் ஆகியன மனிதன் நடப்பதற்கு சிறந்த இடம். பாதணி அணியாது வெறும் கால்கள் இப்படியான பூமியில் படும்போது தோல்கள் மூலம் எலெக்ட்ரான்கள் ஈர்க்கப்பட்டு ஒக்சிசன் ஏற்றப்பட்டு தோல்களில் ஏற்படும் இறந்த செல்கள் நீக்கப்படும்.
அத்தோடு உயர் இரத்த அழுத்தம் குறைவதோடு குறை இரத்த அழுத்தம் மேம்படும். சுவாசப் பிரச்சனை மற்றும் ஆர்த்தரைடீஸ் நோய்கள் குணமடையும். கடல் ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மணல் பரப்பு நடைத் தெரப்பிக்கு சிறந்த இடமாகும். கடல் பரப்பில் உப்பும் சேர்ந்திருக்கும் உப்பின் மக்னீசியம் அளவு அதிகமாய் இருக்கும். இவை காலில் தோல் பரப்பில் நோய் தாக்காது உறுதுணையாகும் மருந்தாகக் கூட அமையும். உப்பு ஒரு இயற்கையான நோய் நிவாரணி என்பது நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களிற்கே நன்றாகத் தெரியும். கடற்கரை இல்லாத இடங்களில் குடியிருப்பவர்களிற்காகவும் வீட்டுக்கு வெளியில் செல்ல முடியாத சூழலிலிருப்பவர்களிற்காகவும் சிறப்பு நில விரிப்புகள் காலுறைகள் கையுறைகள் போன்ற தயாரிப்புகள் சந்தைக்கு வந்துவிட்டன. இந்த நில விரிப்புகளை மேசை மேலும் கதிரைக்கு கீழே நிலத்திலும் விரித்து விட்டோமானால், உள்ளங்கைகளையும் பாதங்களையும் அதில் வைத்து அழுத்தம் கொடுக்கலாம். கம்பியூட்டரில் வேலை செய்யும் போது, உடலில் இருந்து வெளிப்படும் காந்த அலைகளின் தாக்கத்தை இதன்மூலம் குறைத்துக்கொள்ளலாம்.


எமக்கு இந்த நடை தெரப்பி மூலம் மன அழுத்தம் குறைவதனால் மன அமைதி கிடைக்கின்றது நாம் நல்ல மனநிலையுடன் எமது அன்றாட வேலைகளை விருப்புடன் செய்து சந்தோசமக வாழ முடியும்.
மணல் மண்ணில் வீடு கட்டி விளையாடுவது, களிமண் பொம்மைகள் செய்வது, மண்ணில் குழி தோண்டி செடி நடுவது ஆகியன எல்லாம் சிறந்த பூமிச்சிகிச்சை ஆகும். எப்போதும் காலணிகள் உடனே இருப்பது குளிரூட்டப்பட்ட அறையில் நாள் முழுவதும் இருப்பது சிறிய தூரம் பயணிக்க கூட வாகனங்களை உபயோகிப்பது போன்ற இன்றைய காலகட்டத்தில், நாம் நாகரிகம் என்ற பெயரில் பூமிக்கும் எமக்கும் ஆன தொடர்பை தவிர்த்துக் கொள்வதனால் நாட்பட்ட நோய்களை வரவழைத்துக் கொள்கின்றோம் இந்த நடைதெரப்பி மற்றும் பூமிச்சிகிச்சை என்பன உடலில் உள்ள மற்றும் மனதில் உள்ள பல நோய்களுக்கு நல்ல மருந்தாக அமையும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!

கையாலாகாத கணவனுக்காக சத்தியத்தை மீறிய தாதி

சன நடமாட்டமற்ற நிலையில் வீதி வெறிச்சோடி கிடந்தது. மதிவதனியை அணைத்தபடி மணிவண்ணன் கார் பின் சீட்டில் அமர்ந்திருந்தான். மணியண்ணன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். எதிரில் போலீஸ் வண்டி இவர்களை மறித்தது. “ஊரடங்கு வேளையில் எங்கே போகின்றீர்கள்? கீழே இறங்குங்கள்.” அதிகாரமாக கட்டளையிட்டார் போலீஸ்காரர். மணி அண்ணன் கீழே இறங்கி “ஐயா பிள்ளைத்தாச்சி பொண்ணு வலியில் துடிக்குது, அவசரமா ஆஸ்பத்திரிக்கு போறம்.” மணியண்ணன் சொல்லி முடிக்க முதலே “சரி சரி போங்க போங்க” என்று போக அனுமதித்தார் அந்த போலீஸ்காரர்

அவர்கள் வேகமாக ஆஸ்பத்திரியினுள் நுழைந்த போது ஆஸ்பத்திரியே ஆள் அரவமற்று இருந்தது. யார் என்னவென்று கேட்க ஆளில்லாததால், மணிவண்ணன் மதிவதனியை நேரே பிரசவ வார்டுக்கே கொண்டு வந்து சேர்த்து விட்டான். மனைவி படும் வேதனையைப் பார்த்து தாங்க முடியாது மணிவண்ணன், குதிரை வேகத்தில் தன் வேகத்தை கூட்டி மனைவியை அழைத்து வந்து விட்டான். வந்துதான் என்னபலன் அவனுடைய மனைவியை கவனிக்க அங்கு யாரும் இல்லையே! என்ன செய்வது என தெரியாமல் புழுவாகத் துடித்தான்.

அங்கும் இங்கும் ஓடி ஓடி, யாராவது மருத்துவர்களோ தாதிமார்களோ தென்படுகின்றனரா என பார்த்தான். மணி அண்ணன் இவ்விடத்திலே அனுபவசாலி. அடிக்கடி நோயாளிகளை வைத்தியசாலையில் கொண்டு வந்து சேர்ப்பவராதலால், வைத்தியசாலையில் வேலை செய்பவர்களை ஓரளவு தெரிந்து வைத்திருந்தார். ஆதலால் மணி அண்ணன் சிவில் உடையில் ஒரு தாதியை தேடி கூட்டி வந்தார். “அண்ணா இவ இந்த ஆஸ்பத்திரியில் தான் தாதியா வேலை செய்கின்றார், வதனி அக்காவுக்கு உதவி செய்ய கூட்டி வந்து இருக்கின்றேன்” மணி அண்ணன் கூறி முடிக்க முதலிலேயே “ஐயையோ அதெல்லாம் முடியாது வேலைநிறுத்த போராட்டம் நடக்குது ,ஊழியர்கள் யாரும் வேலை செய்வதில்லை என சத்தியம் செய்யாத குறையாக சபதம் எடுத்துள்ளோம். அது தெரியும் தானே உங்களுக்கு?” என்று சொல்லிய வண்ணம் அவ்விடத்தை விட்டகல முயன்றாள். தயவுசெய்து மிஸ் எப்படியும் இந்த உதவி செய்யுங்கோ. என்று கையெடுத்து கும்பிட்டான் மணிவண்ணன்.

முடியாது எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் வேலை செய்ய மாட்டோம். உறுதியாக தாதி கூறிய போது அவளின் காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்டு கெஞ்சி கேட்டான், அந்த பாசமிகு கணவன். “ஆ ஐயோ அம்மா” மனைவியின் அலறல் சத்தம் அவனை வதைத்தது மனைவிக்கு எந்த உதவியும் செய்ய முடியாத கையாலாகாத கணவனாக அவன் நின்று கொண்டிருந்தான். நீந்தத் தெரியாத ஒருவன் நட்டாற்றில் தத்தளிக்கும் போது கையில் கிடைத்த மரக்கிளையை பற்றி பிடிப்பது போன்ற நிலையில் தாதியின் காலை பிடித்து கெஞ்சிக்கொண்டே இருந்தான்.

அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் அந்த தாதியின் மனத்தை இழக வைத்தாலும், அந்தக் கணவனின் கெஞ்சல் தாதியின் மனதை உருக வைத்து விட்டது. அவள் உடனடியாக செயல்படத் தொடங்கிவிட்டாள். மருத்துவத் தாதி செய்யும் வேலையை, சாதாரணமான தாதி அவள் செய்யும் போது மிகவும் சிரமப்பட்டாள். பிரசவமும் மிகவும் சிக்கலாக இருந்தது. குழந்தை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம், அழுவதை நிறுத்திவிட்டு குழந்தை வெளியே வருவதற்கு ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டாள் அந்தத் தாதி, அந்தப் பெண் அலறுவதை நிப்பாட்டியது மட்டுமல்லாமல், மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.

செய்வதறியாது திகைத்த தாதி, போதிய அனுபவம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டாள். ஆண்டவனை நினைத்து மன்றாடிய வண்ணம் தனது முழு முயற்சியையும் கொடுத்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்படடாள். வெளியிலே மனைவியின் கதறல் சத்தம் கேட்க கேட்க தீயில் விழுந்த புழுவாக மணிவண்ணன் துடித்துக் கொண்டிருந்தான். திடீரென அலறல் சத்தம் நின்றது.

அவனது இதயம் ஒரு நிமிடம் துடிப்பை நிறுத்தியது போல் உணர்ந்தான். என் மனைவிக்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்று கைகளை பிசைந்து கொண்டான். தன்னையே நம்பிய தன் மனைவிக்கு உதவ முடியாத தனது கையாலாகாத தனத்தை எண்ணி கடவுளே கடவுளே என அலறினான். மனிதன் இயலாமையின் போது கடவுளிடம் சரணடைவது சகஜம்தானே மணிவண்ணனும் கைகுவித்து கும்பிட்டு கடவுளிடம் கேட்டு மன்றாடிக்கொண்டிருக்கும் போது தான், பிறந்த குழந்தை அழும் சத்தம் கேட்டது.

கடவுளே நன்றி! என்று திரும்பவும் கைகுவித்தான். பெரும் சிரமத்தின் பின் குழந்தையை வெளியில் எடுத்தாள். குழந்தையை குளிக்க வைத்து, உரிய இடத்தில் படுக்க வைத்த பின், தாய்க்கான மருந்தை ஊசி மூலம் ஏற்றி தாய்க்கான சிகிச்சையையும் சரிவரச் செய்து முடித்தாள். வெளியே வந்த தாதி உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றாள். நான் பார்க்கலாமா? என மணிவண்ணன் கேட்ட போது சிறிது நேரம் பொறுங்கோ என திரும்பவும் உள்ளே சென்றுவிட்டாள்.

தாதியின் மனதில் இனம் தெரியாத உணர்வுகள் போதிய அனுபவம் இல்லாமல், பிரசவம் பார்த்தது, குழந்தை வெளிவரும் சமயத்தில் தாய் மயங்கியது, பெருத்த சிரமத்துடன் குழந்தையை வெளியில் எடுத்தது தாய்க்கான மருந்தைக் கொடுத்து தாயையும் சேயையும் சுகமாக வைத்திருப்பது எல்லாம் தன்னுடைய வெற்றி தான், ஆனாலும் சுகாதார ஊழியர்களின் சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை மீறியது அவர்களுக்கு கொடுத்த சத்திய வாக்கை மீறி நோயாளியை காப்பாற்றியது அத்தோடு அவளிற்குரிய வேலை இடம் இல்லாத இடத்தில் அனுமதி இன்றி நுழைந்து வேலை செய்தது, என அவள் செய்த பிழைகள் அதிகம் உள்ளது. இருந்தாலும் இரண்டு உயிர்களை காப்பாற்றி விட்டேன், இன்னும் ஐந்து நிமிடங்கள் பிந்தி இருந்தால், ஒரு உயிர் அல்ல இரண்டு உயிர்களும் போயிருக்கும். அந்தக் கணவனும் வேதனையில் துடித்து இருப்பான். மனசாட்சிப்படி நான் செய்ததுதான் சரி என நிம்மதியான தாதி, தாயையும் சேயையும் சாதாரண வார்ட்டுக்கு இடம் மாற்றி, கணவனிடம் ஒப்படைத்தபின், அவள் தன இருப்பிடம் நோக்கிச் சென்றால்.

காலத்தினால் செய்த “உதவி சிறிதெனினும்” “நன்றி சிறிதெனினும்” ஞாலத்தின் மாணப் பெரிது.


எழுத்து,
மங்கை அரசி.

தனஞ்சயன் மனதில்

தனஞ்சயன் மனதில் எண்ண ஓட்டங்கள் ஓடின. பாதை ஓரத்தில் அனாதரவாக கிடந்தவனின் எண்ணங்கள் பின் நோக்கி நகருகின்றன. கால்கள் முறிவடைந்த நிலையில், உடம்பில் ஏற்பட்ட காயங்களில் இருந்து வடிந்து உறைந்திருந்த இரத்தத்தின் மேல் எறும்புக் கூட்டம் மொய்த்தபடி இருந்தது. அப்படியே எறும்புகள் அவன் உடம்பிலும், காயத்திலுமிருந்து கடித்துக்கொண்டிருந்தன. வலி தாங்க முடியாமல் குரல் விட்டு அளவே முடியாத பலவீனத்துடன் அனுங்கிக்கொண்டிருந்தான். இந்த நேரத்தில்தான் பழைய நினைவுகள் பாய்ந்து வந்து அவன் மூளையை குடைந்தது.

தனஞ்சயன் அழகான வாலிபன் இன்னும் திருமணம் ஆகவில்லை ஆனால் அவனது நண்பன் மனோகரனிற்கு திருமணம் ஆகிவிட்டது. காதல் திருமணம்தான். இரு பக்கத்திற்கும் பெற்றோரின் அனுமதியற்ற நிலையில் தனிமையில் மோதிரம் மாற்றி நண்பர்களின் உதவியுடன் பதிவுத் திருமணமும் நடத்தி கொண்டான். தனஞ்சயனும் முழு உதவியுடன் இருந்தான். மனோகரனின் மனைவி கௌரி, அண்ணா அண்ணா என்று தனஞ்சயன்மேல் அன்பு மழை பொழிந்தாள் தனஞ்சயனும் அவளை உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக் கொண்டான்

ஒரு வருடம் கடந்த நிலையில் கௌரி ஒரு அழகான ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். சந்தோசமாக தான் காலங்கள் ஓடியது. ஆனால் அது நிலைக்கவில்லை ஒரு விபத்தில் மனோகரன் இறந்துவிட்டான். துடித்துப்போனாள் கௌரி தானும் இறந்து விடலாம் என கௌரி நினைத்தாலும், குழந்தை பிரபுவின் எதிர்காலத்தை நினைத்து வாளாவிருந்தால்
தனஞ்சயனின் உதவி அவளுக்கு மலைபோல உதவியாக இருந்தது. அயலவர்களின் சந்தேகப் பார்வையும் பேச்சுக்களையும் அவதானித்த கெளரி, தனஞ்சயனிடம் வீட்டிற்கு அடிக்கடி வர வேண்டாம் எனவும் தானே தனிமையிலேயே தன் மகனை வளர்த்து கொள்கின்றேன் எனவும் சொல்லிவிட்டாள்


தனஞ்சயனும் அடிக்கடி கௌரி வீட்டுக்கு போகாவிட்டாலும் மாதம் ஒருமுறை கௌரி வீட்டுக்கு வந்து தேவையான உதவிகளை செய்து வந்தான். தனஞ்சயன் மனதில் சஞ்சலம் ஏற்பட ஆரம்பித்தது. கௌரி இளம்பெண்ணாக தானே இருக்கின்றாள். மனோகரன் தான் இறந்து விட்டானே. நானும் திருமணம் ஆகாதவன், என மனதில் ஏதோ கணக்குப் போட்டான். இதமாகத் தான் இருந்தது. மனது கிளுகிளுப்பாக இருந்தது. இந்த எண்ணங்கள் ஓடிய போது அவனை அறியாமலே கால்கள் கௌரி வீட்டை நோக்கி நடந்தன. மாலை நேரம் சூரியன் மேற்கே மறைய தொடங்கி விட்டான். தனஞ்சயன் கௌரி வீட்டு அழைப்பு மணியை அழுத்திய போது கதவு திறந்துகொண்டது. எதிரிலே கௌரி ஈரத்தலையை துவட்டியபடி நெற்றியில் விபூதி சந்தனம் பூசிய படி அழகுச் சிலையென நின்றாள். “ஓ இன்று பிரதோஷம், விரதத்திற்கான பூசையை முடித்து விட்டு வருகின்றாள் போலும்”. தனஞ்சயன் மனதிலே எண்ணிக்கொண்டான். தன் கட்டுப்பாட்டை மீறிய அவன் கெளரியை அப்படியே இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

கௌரி இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை பெரிய போராட்டத்தின் பின் தனஞ்சனிடமிருந்து விடுபட்ட அவள், மிகுந்த வெறுப்புடன் அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். “வெளியே போ நாயே! நம்பிக்கை துரோகி, இனிமேல் என் கண்ணில் முழிக்காதே! இருந்துபார் உன்னுடைய கடைசி காலத்தில் நீ அனாதைப் பிணமாக தான் சாவாய். உனக்கு எந்த மனித உதவியும் கிடையாது. உன்னை சுற்றி எறும்புக்கு கூட்டம், மொய்த்த படி, உன்னுயிரை படிப் படியாகச் சாகடிக்கட்டும். நான் சொன்னது நடக்கும்” என்று சொன்னபடி அவனை வெளியே தள்ளி கதவைப் பூட்டிக் கொண்டாள்.

நான் ஏன் அனாதைப் பிணமாக சாகப்போகிறேன்? எனக்கென்ன உறவுகளா இல்லை? என்று எண்ணிய வண்ணம், தன்னூருக்குப் புறப்பட்டான். புகையிரதத்தில் ஏறியமர்ந்தவன், அமரமுடியா ஆத்திரத்தில் வாசல்கம்பியைப் பிடித்தவண்ணம் கோபமாக எழுந்து நின்றான். “அம்மாவிடம் சொல்லி பெண் பார்க்கச் சொல்லி உடனடியாக திருமணம் செய்து நான் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அவளுக்கு அப்பத்தான் புத்தி வரும், நல்ல வாழ்க்கையை தவறவிட்டேன் என கவலை வரும்”. என எண்ணியபடி நின்று கொண்டே ஒரு காலைத் தூக்கிய போது, மறு கால் சறுக்கிவிட புட் போர்டில் இருந்து கீழே விழுந்து விட்டான். அவன் விழுந்ததை புகைவண்டியில் இருந்து யாரும் பார்க்கவில்லை. இரவு பத்து மணி போல விழுந்தவன் காலை 5 மணிக்கு ஆலய மணி ஓசை அடித்துக்கொண்டிருந்தது. 7 மணி நேரமாக அவன் உடலை எறும்புகள் தின்று கொண்டிருந்தன பழைய எண்ணங்கள் அவனை புரட்டிப் போட பத்தினி சாபம் பலித்து விட்டது என்று வாய் முணுமுணுக்க மெதுவாக கண்ணை மூடினால் இதயத்துடிப்பு நின்றுவிட்டது. “விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல், தீமை புரிந்தொழுகு வார்” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க.

“விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்,
தீமை புரிந்தொழுகு வார்”
பொருள் :-
நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

எழுத்து,
மங்கை அரசி.

முயல் மட்டுமா செத்தது? காதலும்தான்!

சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கிவிட்டது. வீதியில் விளக்குகள்கூட மங்கலாக தூரம் ஒன்று என்ற ரீதியில் அழுது வடிந்து கொண்டிருந்தது. அது ஒரு காட்டுப் பகுதியின் ஊடாக உள்ள ஒரு வீதி, சுதர்சன் உற்சாகமாக கார் ஓடிக்கொண்டிருந்தான். அருகில் அவனுடைய அன்பு மனைவி, சினிமா பாடலை ரசித்தவண்ணம் கண்மூடி பாடலுடன் தானும் சேர்ந்து மெதுவாக பாடிக்கொண்டிருந்தாள்.

சுதர்சன் கடைக்கண்ணால் மனைவியைப் பார்த்தான், சுமதி அழகான பெண், அறிவுடன் கூடிய அமைதியான பெண், சுதர்சனும் சுமதியும் இணைபிரியாத தம்பதியர்கள். ஆதர்ச தம்பதியர்கள் என்று நட்பு வட்டாரத்தில் பேசப்பட்டார்கள். அவன் தன் மனைவியிடம் கோபமாக என்றுமே நடந்து கொண்டதில்லை. சுமதியும் ஒரு தடவை கூட தன் கணவனை எதிர்த்து கதைத்திருக்கமாட்டாள். சுதர்சனின் எண்ணங்கள் அவனது காதல் மனைவியை சுற்றி வட்டமிட்டது. அவன் ஒரு அலுவலகத்தில் பெரிய பதவியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சுமதியும் வேலை பார்த்த பெண்தான், திருமணத்தின் பின் கணவனின் வேண்டுகோளிற்கிணங்க வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டாள். வீட்டிலேயே அவனுடைய நோய்வாய்ப்பட்ட பெற்றோரை கவனித்துக்கொண்டு, வீட்டு நிர்வாகத்தையும் திறம்பட நடத்திவந்தாள். வீட்டு வேலைகள் செய்ய வேலைக்காரர்கள் இருப்பதினால் அவளுக்கு எந்தவித சிரமமும் இருக்கவில்லை. மாலை வேளையில் கோவில், பீச், ஷாப்பிங் என்று சுற்றி வருவார்கள். வார விடுமுறையில் கொஞ்சம் தூரமான இடங்களுக்கு சுற்றுலா செல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு வசந்தமாக பூத்துக் குலுங்கியது அன்றும் ஒரு வார விடுமுறை நாள்தான், அவர்கள் ஒரு பயணம் புறப்பட்டு இருந்தார்கள்.

காட்டின் ஊடாக அமைக்கப்பட்ட வீதியினூடாக காரில் சென்று கொண்டிருந்தனர், வீதியில் அவர்களுடைய கார் மட்டும்தான் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென சுதர்சன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான், என்னவெனச் சுமதியும் கண்களாலேயே வினவினாள்! முயல் ஒன்று அடிபட்டுவிட்டது, என்று சொன்னபடியே அவன் கீழே இறங்கினான். சுமதியும் கீழே இறங்கினாள், முயல் இறந்தபடி கார் முன்னே கிடந்தது. இது முதலிலேயே இறந்துபோன முயல் போன்று இருக்கின்றது. யாரோ காரின் முன்னே வீசியது போல் அல்லவா இருக்கின்றது. தனக்குள்ளேயே அவன் சொல்லிக்கொண்டான் அப்போது அங்கு ஒரு மனிதன் வந்தான். என்ன விஷயம்? என்ன நடந்தது? என வினாவியபடி வந்த அவன் சுதர்சன் உடன் கதைத்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை சுமதி பக்கம் பார்க்கும் போது அசௌகரியமாக இருப்பது போன்று சுமதி உணர்ந்தாள். சுதர்சனும் அவ்வாறே உணர்ந்ததால், காரின் உள்ளே போய் அமரும்படி கண்ஜாடை காட்டினான். அதன்படி அவளும் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். அந்த மனிதனிற்கு அந்த நிகழ்வு பிடிக்கவில்லை. அவனுடைய குரலில் ஏற்றம் இருந்தது, கோபம் கொப்பளித்தது, இருவருக்குள்ளும் வார்த்தைகள் தடித்தன, கைகலப்பு ஏற்பட்டது சுமதி பயந்தாள், கணவனை வந்து காரில் ஏறும்படி சத்தமாக கத்தினாள். ஆனால் நடந்தது வேறு விதமாக இருந்தது, மிகவும் பயங்கரமாக இருந்தது, கண்சிமிட்டும் நேரத்தில் அவன் சுதர்சனை தள்ளி விழுத்திவிட்டு, காரில் ஏறி டிரைவர் சீட்டில் இருந்து உள்பூட்டுப் போட்டுப் பூட்டிக் கொண்டான். நடந்த விபரீதத்தை சுமதி பின்புதான் புரிந்துகொண்டாள் அவளால் இறங்கி வெளியில் செல்ல முடியாமல் உள் பூட்டு போடப்பட்டு இருப்பதை உணர்ந்தாள்.

அவள் என்னதான் சத்தம் போட்ட போதும் எந்த சத்தமும் வெளியில் கேட்கவில்லை. கார் கண்ணாடியை அடித்தாள், எதுவும் முடியவில்லை. வந்தவனை தாக்க முயற்சித்தாள், காருக்குள் இருந்த அவன் சுமதியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான், சுமதி குருவிக் குஞ்சைப்போல் அடங்கி ஒடுங்கி விட்டாள். வெளியில் இருக்கும் சுதர்சனால் எதுவும் செய்ய முடியவில்லை. போனை காருக்குள் வைத்து விட்டு இறங்கிவிட்டான், அதனால் யாருக்கும் தொலைபேசியில் தொடர்பு ஏற்படுத்தி உதவியும் கேட்கமுடியவில்லை. அடர்ந்த இருளில் உள்ளே என்ன நடக்கின்றது என்றும் தெரியவில்லை. கார் கண்ணாடியை உடைத்து விடலாம் என்றால், அவன் கை கால்கள் நடுங்கின, வந்திருப்பவன் முரடன், அவனுடன் சண்டை செய்யக்கூடிய தைரியம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தான். தாங்கள் இரண்டு பேர் இருப்பதனால் அவன் ஒருவன்தானே அவனை எப்படியும் சமாளிக்கலாம் என்றாலும், தான் ஆண்! தன்னாலேயே முடியவில்லை என்றால், மனைவி மட்டும் எப்படி துணிவாக இருப்பாள்? என்று எண்ணினான். ஆனால் சுமதி தன் கணவன் தன்னை காப்பாற்றுவான், என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஏதாவது மரக்கட்டையை கையிலெடுத்து கார் கண்ணாடியை உடைத்து உள்ளே வந்து விடுவார் என்று எதிர்பார்த்தாள். அப்படி அவர் வரும் போது, தானும் வீரத்தோடு போராடி அவனை வீழ்த்தி விட வேண்டும் என மனக்கணக்கு போட்டு இருந்தாள். ஆனால் எல்லாம் கற்பனை ஆகிப் போய்விட்டது. அவளுடைய கணவனும் கையாலாகாதவனாக காரின் பின்புறமும் முன்புறமும் ஓடிக்கொண்டிருந்தான். ஆனால் உள்ளே வருவதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை என்பதை பார்த்து அவளுடைய  அந்த இரவு அவளிற்கு நரகமாக்கிக் கொண்டிருப்பதை எண்ணி வருந்தினாள். சில பல நிமிடத் துளிகள் நீடித்தன…

வந்தவனும் சுமதியை விட்டு விட்டு, காருக்குள் இருக்கும் போன், பணம், நகைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு இறங்கினான். போகும்போது முயலையும், எடுத்துக்கொண்டு போகின்றான். இறந்த முயலைக் எடுத்து, தோளின் மேலே போட்டு, நடைபோட்டு சென்றான் அந்த முரடன். நடப்பவற்றை அவதானித்தபடி இருந்த சுதர்சன், உடனடியாக செயற்பட ஆரம்பித்தான். காரினுள்ளே வந்து இருந்தவண்ணம், மனைவியை பார்த்தான்.

அவள் ஆடைகளை சரி செய்த வண்ணம், அழுதபடி இருந்ததைப் பார்த்து, “என்ன நடந்தது என்று?” கரகரப்பான குரலில் கணவன் கேட்டதைப் பார்த்து சுமதி திகைத்துப் போனாள். “எப்படி இருக்கின்றாய்? என்று கேட்பீர்கள் என்று நினைத்தேன். ஏன் ஒரு மாதிரியாக கதைக்கிறீங்க?” என்று சுமதி கேட்டாள் “அது இருக்கட்டும், இங்க இதுவரைக்கும் என்ன நடந்தது?” என்று குற்றம் சாட்டுவதைப்போல் சுதர்சன் அவளைப் பார்த்து கேட்டான். “ஏன் உங்களுக்கு ஏதும் தெரியாதா?” பதிலுக்கு அவளும் வினாவினாள். கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான் சுதர்சன் “நான் ஆம்பிள அப்படித்தான் கேட்பன், கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு!” திகைத்துப் போனாள் சுமதி நிமிர்ந்து அவனைப் பார்த்து, “ஆம்பிளையா? உங்கள் ஆம்பள தனத்தை வந்த முரடனிடம் ஏன் காட்டவில்லை? அந்த மனிதனின் முகத்தில் நான் என் நகத்தால் கீறியபோது, அவன் ரத்தத்தைத் துடைத்துவிட்டு பின், என்னை அடித்தான். அப்போது இந்த ஆம்பளையின் கைகள் எனக்கு உதவிக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என் உயிர் காதலி, என் உயிர் காதலி, என்று சொல்லுவீங்களே? அந்த காதல் செத்துவிட்டதா? ஆனால் இப்போ உங்க மேல வைத்த நம்பிக்கை மட்டுமல்ல, உங்கள் மேல் வைத்த காதலும் செத்துவிட்டது!” என்று சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி விட்டாள்.

“சுமதி” என அழைக்க எண்ணிய சுதர்சன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். நான் ஆம்பிள, லேசுல பணிந்து போகக் கூடாது. எவ்வளவு நேரம் வெளியில குளிரில் நிற்பாள்? தானாக வருவாள் என்று எண்ணினான். ஆனால் எதிர்ப்பக்கம் இருந்து வந்த பஸ்சை மறித்து, அதில் அவள் ஏறி சென்று விட்டாள். தப்பு செய்து விட்டேனோ? என எண்ணிய படி, அவன் காரை ஸ்டார்ட் செய்தான்.  காரும் ஸ்டார்ட் ஆகவில்லை. அவனுடைய வாழ்வும் அதே இடத்தில் நின்று விட்டது.

சுதர்சனின் வாழ்வும் காரும் நடுத்தெருவில் நின்றது. கணவனை திரும்பிக்கூட பார்க்காமல், அவள் சென்று கொண்டே இருந்தாள். வாழ்க்கையில் காதல் மட்டுமல்ல ஆணித்தரமான நம்பிக்கையும் தேவை என்பதை சுதர்சன் அன்று புரிந்தானோ? இல்லையோ? வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.

எழுத்து,
மங்கை அரசி.

தனிமைப்படுத்தப்பட்டேன்

எவ்வளவு நேரம் தான் ஜன்னல் ஊடாக வெளி நிலத்தை பார்ப்பது? வெறிச்சோடிய வீதி, வாகன ஓட்டமில்லாது இரைச்சலும் இல்லை. எந்த நேரத்திலாவது ஒன்றிரண்டு வாகனம் ஓடினாலும் வீதியில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. காக்கை குருவிகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்தன. சலிப்புடன் ஜன்னலை விட்டு வீட்டினுள் வந்து புத்தகங்களை புரட்டினேன், ஏற்கனவே படித்த புத்தகங்கள் தான் அவை. பத்திரிகையை விரித்தேன் நான் வாசிக்காத வரிகள் எதுவும் இல்லை. திரும்பவும் ஜன்னல் ஊடாக நோட்டமிட்டேன், மாலை நேரத்தில் பந்து விளையாடும் பையன்கள் வரவே இல்லை, காலையில் பத்திரிகையை போட்ட பையனை நான் ஆசையோடு பார்த்ததை நினைவு கூர்ந்தேன். காதலிக்க தொடங்கினாள் தபால்காரன் தெய்வம் ஆகிவிடுவான், என பாடிய புலவர், அனுபவித்துத்தான் பாடியிருப்பார். கொரோனா வந்ததனால் பத்திரிகை போடுபவன் தெய்வமாக தான் தெரிகின்றான். மனதில் ஓடிய எண்ணங்கள் வாயை மெதுவாக சிரிக்க செய்தன, நல்ல நகைச்சுவை தான் இந்த தனிமைச்சிறையிலும் வருது. ரணகளத்திலும் ஒரு குதூகலம். ஒரு கண நேரம் மகிழ்ச்சிதான் திரும்பவும் மனம் சலித்துக் கொண்டது. மனிதர்களைப் பார்க்க ஆசையாய் இருந்தது ஆனால். 

நான் தனி அறையில் இருக்கின்றேன் என்னுடைய உணவு தேவைகள் உள் ஜன்னல் ஊடாக நிறைவேறியது. இயற்கை உபாதைக்கு அறையுடன் சேர்ந்த குளியலறை உள்ளது. என்னுடைய அறையில் சகல வசதிகளும் உள்ளன. ஆனால் வெறுமையாக உணர்கின்றேன்.   வீட்டுச் சிறை என்பது  இதுதானா? நான் எந்த தவறும் செய்யவில்லை. ஊர் சுற்றிப் பார்க்க அண்டைய நாடு சென்று திரும்பியதனால் எனக்கு இந்த நிலை.

எழுந்து போய் டிவியை முறுக்கினேன், கொரோனா என்றுதான் டிவி சொல்லிக்கொண்டிருந்தது டிவியை நிறுத்தி கம்ப்யூட்டரை இயக்கினேன் அங்கேயும் கொரோனா செய்திதான் எல்லாம் எதிர்மறைச் செய்திகள் மொபைல் போனை எடுத்தேன் என்னுடன் கதைத்த அத்தனை நண்பர்களும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை திரும்பத் திரும்பக் கூறினார். மன அழுத்தம் வேகமாக இருந்தது. மாடியில் இருந்து குதித்து விடலாமா, என நினைத்தேன் ஆனால் அறைக்கு வெளியில் போக வழியில்லை. திரும்பவும் ஜன்னலோரம் வந்தேன் எதிர் வீட்டு ஜன்னலில் ஒரு பூஞ்சிட்டு, எனக்கு கை காட்டியது. நானும் ஆர்வமுடன் கை காட்டினேன். என்னுடன் வரும்படி சைகை காட்டினேன். குழந்தை மறுப்பு தெரிவித்த படி உள்ளே ஓடி விட்டது.

தொடர்ந்து வீதியை நோக்கியவண்ணம் நின்றேன். வீதியில் வாகன சத்தம் கேட்டது, வாகனம் நிறுத்தப்பட்டது, அதிலிருந்து ஒரு மனிதன் இறங்கினான், ஆச்சரியப்பட்டுப் போனேன். வேற்றுகிரகவாசியோ! என அவருடைய செய்கையை கவனித்த பின் வாய்விட்டு சிரித்து விட்டேன். முதலில் முகக் கவசத்தை கழட்டினார், பின் தலையில் இருந்து கால்வரை போடப்பட்டிருந்த உடையையும் கழட்டினார், கழட்டிய உடைகளை ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டுக் காருக்குள் வைத்து விட்டார். காலில் உள்ள சப்பாத்துக்களை ஏற்கனவே கழட்டி விட்டார். காலில் செருப்பு அணிந்தபடி நிமிர்ந்தார். அவரை பார்த்த நான், அட நம்ம வைத்தியர் தம்பி. என மெதுவாக சொல்லிக் கொண்டேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு திரும்பிவந்து தூரமாக நின்றார். உள்ளிருந்து யாரோ கதவைத் திறந்தபோது, உள்ளே சென்று குளியல் அறைக்குள் நுழைந்து விட்டார் என நான் கணித்துக் கொண்டேன். குளியலறையில் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதனால், என் அனுமானம் சரியாக இருந்தது. வெறும் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவால், சகல வல்லமையும் பொருந்திய மனித உலகமே பயந்து நடுங்குவது வேடிக்கையாகத்தான் இருந்தாலும். தவிர்க்க முடியாத செயல் இது. பூமிப்பந்தில் உள்ளவர்களின் சிந்தனைகள் எல்லாம் கொரோனா என்று ஓடுகின்றது. கொரோனா நோயை எப்படி ஒழிப்பது? கொரோனா நோயை எப்படி சுகப்படுத்துவது? கொரோனாவிலிருந்து இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்வது? என்பவையே மனித மூளையின்  தேடுதலாக இன்று உள்ளது. உலகமே இன்று ஒரு நேர்கோட்டில் இயங்குகின்றது

எப்படியான உணவு வந்தாலும் நான் உண்பேன், குறை ஏதும் சொல்ல மாட்டேன். இருமல், தும்மல், மூக்கு கூட சிந்தாமல் என்னைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன். மேற்படி விடயம் நடந்துவிட்டால் நோயாளி என கருதி என் சிறை காலம் கூடிவிடலாம். 14 நாட்கள் எப்போது தீரும்? என்று நான் கை விரல்களில் எண்ணி களைத்துப் போய்விட்டேன் நாட்கள் மட்டும் ஊரவில்லை, மணித்தியாலங்கள் நிமிடங்கள் கூட நகர்வதில் சோம்பல்.

வாகன நெரிசலும், இரைச்சல் சத்தம், வெயில் சூடு, என எதை எதையெல்லாம் வெறுப்பாய் நோக்கினோமோ! அவையெல்லாம் வேண்டும் போல் உள்ளது. எனக்கு சாப்பாடு வரும் போது சோப்பு கட்டியும் உடன் சேர்ந்து வருகிது. சோப்புப் போட்டுக் கை கழுவி கழுவி கைரேகையும் அழிஞ்சு போச்சு. கை கழுவுவதற்காக குளியலறைக்கு நடப்பதுவே என்னுடைய நாளாந்த உடற்பயிற்சியானது சீனாக்காரன் சாப்பிட்டதற்கு நான் கைகழுவுகின்றேன்? என்று பாடிப்பாடி நேரத்தை ஓட்டிக் கொண்டு இருக்கின்றேன்

எழுத்து,
மங்கை அரசி.

பலகை மனைவி ( The Wife with More Hands)

காலையில் எழுந்து, காலைக்கடனை முடித்து, முகம் கழுவி சாமி கும்பிட்ட, பின் பேப்பரும் கையுமாக சோபாவில் அமர்ந்திருந்தான் சுந்தரலிங்கம் என்னும் பெயருடைய சுந்தர். வானொலியில் இசையை ரசித்தவண்ணம், பத்திரிகையில் புதினங்களை வாசித்தபடி, கோப்பியை சுவைத்த வண்ணம், சுற்றி நடப்பவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தான். சமையல் அறையில் சமையல் வாசம் மூக்கைத் துளைத்தது. அந்த நேரம் பக்கத்து வீட்டுப் பெண் ஓடி வந்தாள். அவனைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் அவள், அக்கா என அழைத்தபடி சமையலறைக்குள் ஓடினான்.

அக்கா மகளிர் தினத்திற்கு ஒரு கட்டுரை எழுத வேண்டும் பொயின்ஸ் தருவீங்களா? அக்கா இன்றைக்கு வேணும்! வந்தவள் சொல்லி முடிக்கவும், அவன் மனைவி ஜெயா தன் வேலையை கவனித்தபடியே அவளுக்கு உதவினாள். க்ரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) எனும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 15 வயதான பெண் பருவநிலைக்காக போராடிக்கொண்டு உள்ளார். அவர் எப்படி எப்படி போராடினார் என விலாவாரியாக விபரித்த அவன் மனைவி, “வாழ்வாதார உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் நபர் 2019 என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 2019ஏப்ரல், தெற்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் இன்னும் சொல்கின்றேன் உலக நாட்டுத் தலைவர்களை கேள்வி கேட்ட, அந்த சிறிய பெண்ணைப் பற்றி இன்னும் இன்னும் விளக்கமாக கூறினாள்.

கேட்டுக்கொண்டிருந்த சுந்தர் பிரமித்துப் போனான் அப்போது அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னதுதான் சுந்தருக்கு எரிச்சலை கூட்டிவிட்டது பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் அக்கா இவ்வளவு விஷயங்களை உங்கள் மூளைக்குள் புதைத்து வைத்துள்ளீர்கள் இன்னும் வேறு விஷயங்களும், அங்கு இருக்கின்றதா? உங்கள் மூளை என்ன கொம்பியூட்டரா?! தேங்க்ஸ்(Thanks) அக்கா என்று சொன்னபடி ஓடிவிட்டாள். “பெரிய படிப்புகாரி :/” சுந்தர் சலித்துக் கொண்டான். அந்த நேரம் பாடசாலை வான் வந்து கோர்ன் அடித்தது.

பிள்ளைகள் இருவரிடமும் சாப்பாட்டு பெட்டி தண்ணீர் போத்தல் எல்லாம் கொடுத்து மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்! என்ன? என்று சொல்லிய வண்ணம் பாடசாலை பாக் முதுகில் மாட்டி விட்டு அனுப்பி வைத்தாள். Bye அம்மா! என்றபடி பிள்ளைகள் ஓடிச்சென்று பாடசாலை வேனில் ஏறி போய் விட்டனர். சுந்தருக்கு சுத்தமாக எதுவும் பிடிக்கவில்லை. குத்துக் கல்லாட்டம் இங்கே நான் ஒருத்தன் உட்கார்ந்து இருக்கிறேன். எனக்கு பாய் சொல்ல தோன்றவில்லை !அப்படி பிள்ளைகளை வளர்த்து வைத்திருக்கிறாள். மனதுக்குள் நினைத்த படி, எதுவும் தெரியாத மாதிரி பத்திரிகையில் நோட்டம் விட்டபடியே அமர்ந்திருந்தான் அப்போது, நான்கு ஐந்து பெண்கள் ஜெயா ஜெயா என கூப்பிட்ட படி வந்தனர். ஜெயா வெளியில் வந்தாள், மல்லிகைப்பூ தருவீர்களா? எனக் கேட்டனர், “ஒரு கல்யாண வீட்டிற்கு போறோம் அதுதான் தலைக்கு வைக்க பூமாலை கட்டப் போகிறோம் என்றார்கள்” ஜெயா மல்லிகை பூ பந்தலைக் கை காட்டினாள். கனகாம்பரம் நிறைய பூத்திருக்குது, அதிலும் தருவீர்களா? என அவர்கள் கேட்ட போது மரத்தில் முறிவு, ஏற்படாது ஒவ்வொரு பூவாக கழட்டி எடுங்கள் என்றவண்ணம், மனைவி சமயலறைக்குள் போன பின்பு அந்தப் பெண்களின் சம்பாஷனையை உற்றுக் கேட்டான் சுந்தர்.

ஜெயா கெட்டிக்காரி எப்படி தோட்டத்தை வைத்திருக்கின்றார். நல்ல கலை உணர்ச்சி உள்ள பெண் என கதைத்தபடி பூக்களை கொய்தனர். திரும்பவும் வயிறு எரிந்தது, பொங்கியது. ஏனோ யார் ஜெயாவை புகழ்ந்தாலும் சுந்தர் கொந்தளித்து தான் போய் விடுகின்றான்.

ஜெயா வந்து காலைச் சாப்பாடு சாப்பிட அழைத்தாள். சுந்தர் மறுத்துவிட்டான், எனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டேன். சோறு சமைத்து ரசமும் வைத்து ஏதாவது பொரியலும் செய்து பால்கறியும் வைத்தால் நல்லது என்றான். நின்று நிமிர்ந்து பார்த்தாள் ஜெயா, என்ன! கண்களால் கேட்ட சுந்தருக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னபடி, அவள் உள்ளே போய் விட்டாள். ஒரு நமட்டுச் சிரிப்புடன் சுந்தரின் எண்ண ஓட்டம் தொடங்கியது முதலே சொல்லியிருந்தால் காலை சாப்பாட்டை செய்யாமல் மதிய உணவை சமைத்து இருக்கலாம் என எண்ணி இருந்திருப்பாள். நல்லா வேலை செய்யட்டும் எல்லோரும் புகழும்போது சந்தோஷப்படுகிறாள், தானே வேலை செய்து களைக்கட்டும் என மனதில் எண்ணிக் கொண்டான்

கண்ணை மூடி எண்ணக் கடலில் மிதந்த அவன் பத்திரிகை விரித்தபடி இருக்க வானொலியில் இசை தவழ்ந்து வந்து தாலாட்ட அவனை அறியாமல் கண்ணயர்ந்து விட்டான். சுவர் மணிக்கூடு 9 மணி அடித்து ஓய்ந்த போது, ஜெயா சுந்தரை தட்டியெழுப்பி நீங்கள் சொன்ன மாதிரி சோறு ரசம் பொரியல் பால்கறி வைத்துள்ளேன். ப்ளீஸ் போட்டு சாப்பிடுங்க எனக்கு நேரம் போய்விட்டது. என்று சொல்லிய வண்ணம் ஓட்டமாக ஓடிச் சென்று ஸ்கூட்டரை இயக்கத் தொடங்கினார்

சுந்தருக்கு ஏனோ மனசாட்சி குத்தியது “நீர் சாப்பிட்டுவிட்டீரா?” என ஒரு கேள்வி கேட்டான் இல்லை நேரம் போய்விட்டது லஞ்ச் கொண்டு போறேன் தானே வாரேன் என சொன்னவண்ணம் புறப்பட்டு விட்டாள். சுந்தருக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது காலையில் எழுந்து இயந்திரமாக வேலை செய்து பிள்ளைகளை ஆயத்தப்படுத்தி பாடசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் உதவி என்று வந்தவர்களுக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்து கொடுத்ததுடன் தனது தேவையையும் சரியாக நிறைவேற்றி விட்டு வேலைக்குப் போகின்றாள். ஆனால் தன்னை கவனிக்கவில்லை. மனைவியின் உடல்நிலை சரியில்லை என படுத்துவிட்டால், இவ்வளவு வேலைகளையும் யார் செய்வார்கள்?

நானும் கூடமாட உதவி செய்திருந்தால் அவளுக்கு சிறிதாக நேரம் மிச்சம் இருந்திருக்கும் அவள் தனது காலை உணவை சாப்பிட முடிந்திருக்கும் அவளுடைய நல்ல குணத்தைத்தானே பாராட்டினார்கள் அவள் சமையலில் மட்டுமல்ல அவளுடைய கந்தோர் வேலையிலும் திறமையானவள், என பெயர் எடுத்துள்ளாள். உலக விடயங்கள் அரசியல் விடயங்கள் சிறு சிறு மருத்துவ குறிப்புகள் என பல விடயங்களிலும் தேர்ந்தவளாக தான் இருக்கின்றாள் இதற்காக நான் பெருமைப் பட அல்லவா வேண்டும்? ஏன் பொறாமைப்பட வேண்டும்? நான் ஆண் என்ற மமதையா?

நான் அப்படிப்பட்டவன் அல்லவே?! இன்று ஜெயா வீட்டுக்கு வந்ததும் அவளிடம் சமரசமாக கதைத்து அவளுக்கு உதவியாக இருந்து வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் இரண்டு மாடுகள் சேர்ந்து இழுத்தால் வண்டி சுகமாக போகும் ஒரு மாடு மட்டும் இழுத்தால் வண்டி பழுதுதான் ஆகும், மாடும் செயலிழந்துவிடும் என எண்ணினான் சுந்தர்

எழுத்து,
மங்கை அரசி.

முதல் அடி எழுதிய முடிவுரை.

அவள் எப்போதும் சந்தோசமாக தான் இருந்தாள். சிரித்தபடி முகம் இருக்க, துள்ளலுடன் நடை இருக்க, குறும்பான சேட்டைகள் செய்யும் மங்கையாக, நான்கு அண்ணன்களுக்கு தங்கையாக, அப்பாவிற்கும் செல்லப்பிள்ளையாக, அம்மா இல்லாத பிள்ளையாக, அம்மும்மாவின் குழந்தையாக, அவள் வலம் வந்து கொண்டிருந்தாள்.

அவள் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். இப்பொழுது அல்ல இது அவளது 20 ஆவது பிறந்த தினத்திற்கு முந்தைய காலம். அவளது 20 ஆவது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திரப் பறவை போல் பறந்து திரிந்த அவளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வண்ணத்துப் பூச்சி போல மகிழ்ந்து பிறந்தவர்களுக்கு தடைகள் போடப்பட்டன. கம்பியால் வேலி போடாவிட்டாலும், கண்டிப்புடன் பல தடைகள் ஏற்பட்டன. அவள் பிடிவாதம் பிடிக்கத்தான் செய்தாள், எதிர்வாதம் செய்து தான் பார்த்தாள், எதுவித பலனும் இல்லை. அப்பாவின் கடுமை அவளுக்கு புதிதாக இருந்தது. அப்பாவிற்கு பக்கபலமாக அண்ணன்மார்களும் இணையாக கதைத்தனர்.

வீட்டில் அவள் அம்மும்மாவின் மடியில் தலை புதைத்து விக்கி விக்கி அழுதாள். அம்மும்மா முதுகில் தடவி தலையை கோதி ஆறுதல் படுத்தினார். ஆனால் அவரும் அப்பாவின் பக்கம் நியாயம் இருப்பதாகத்தான் கூறினார். அந்த காலத்து மனுஷன் தானே! அவர் எதற்காக இந்த கண்டிப்பு? அவள் அப்படி என்ன தப்பு செய்தால்?

அவளுக்கு திருமண பேச்சு வீட்டில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. பொதுப் பரீட்சைகளில் முதல்தர பெறுபவர்களை பெற்றிருந்தும், மேல்படிப்பு படிக்க அனுமதி இல்லை. ஆனால் அவள் சோர்ந்து போய் விடவில்லை. முடியாது என மறுத்தாள், எதிர்வாதமிட்டாள். அப்பாவின் கண்டிப்பில் கடுமை காட்டப்பட்டது. அண்ணன்மார்களும் பிடிவாதம் பிடிக்காமல் சொல்லுக்கு அடங்கி நட என கண்டித்தனர்.

குழந்தை பிள்ளைக்கு சொல்ற மாதிரி உனக்கு நான் புத்திமதி சொல்றேன் நீ பிடிவாதமாய் மறுக்கிறாய் என்று சொல்லி அடித்துவிட்டார், அப்பாவின் கை விரல்கள் அவள் கன்னத்தில் பதிந்து விட்டது. இன்று தான் முதல் அடி, இனி அடிகள் தொடரும். அவள் அழவில்லை கண்ணீர் வற்றிவிட்டது. இல்லை! அவர் திடமாக முடிவெடுத்துவிட்டால்.

பெண்ணாகப் பிறந்து விட்டால் ஆண்களுக்கு அடங்கித்தான் போகவேண்டுமா?! நியாயமான தனது ஆசையை கூட தொலைத்து விட வேண்டுமா? எதிர்கால முன்னேற்றத்தை விடுத்து இன்னொரு ஆணுக்கு அடிமையாக்குவது சரியா? நிமிர்ந்து தந்தையை பார்த்தால். இன்னொரு அடி என் மேல் விழுந்தாள் நான் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்க வேண்டிவரும்! அன்புக்கு கட்டுப்படுவேன், நியாயத்திற்கு அடி பணிவேன், ஆனால் இன்னொரு அடிமை வாழ்க்கைக்கு நான் தயாரில்லை. நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என் சொந்த காலில் நிற்க வேண்டும். எதிர்கால வாழ்க்கையை நான் துணிச்சல் உடன் எதிர்கொள்ளும் துணிவும், வாழ்வுக்கான வருமானத்தை தரும் பணமீட்டும் உயர்வும், எனக்கு வரவேண்டும். அதன் பின்பு நீங்கள் சொல்லும் திருமணத்தை நான் செய்யத் தயார். அதை விடுத்து இன்று உங்கள் சொல்லுக்கு இணங்கி நான் திருமணம் செய்தால், இன்று நீங்கள் அடித்த அடி போல் நித்தம் நித்தம் அந்த கணவனிடமும் அடி வாங்கும் பரிதாபநிலை எனக்கு தோன்றும்.

ஆதலால் இந்த முதலடியின் முடிவுரையை நன்றாக யோசித்து, உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்! சொல்லிய பின் அவ்விடத்தை விட்டு அவள் விலகிச் சென்றாள். இன்று அவள் சட்டம் படித்து சிறந்த ஒரு சட்டத்தரணியாக தினம் தினம் நீதிமன்றப் படி ஏறி வருகின்றாள். அவளது வாழ்க்கையில் அவள் வாங்கிய முதல் அடி.
அப்பா என்றுமே அடித்ததில்லை, அண்ணன்மார்களும் விளையாட்டுக்கு கூட அடித்ததில்லை, பாடசாலையில் ஆசிரியரிடம் கூட அவள் அடி வாங்கியது இல்லை. அப்படி இருக்கையில் அன்று விழுந்து அந்த முதலடி எழுதிய முடிவுரை இன்று சட்டத்தை வரைந்து வருகின்றது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இது போன்ற அடிகள் விழுந்து கொண்டே இருக்கும். முதல் அடியாக இருக்கட்டும் முந்நூறாவது அடியாக இருக்கட்டும், அது தான் உங்களுடைய இறுதியடி, என்று எப்போது நீங்கள் முடிவெடுப்பீர்களே, அப்போது தான் நீங்களும் முடிவெடுக்க முடியும்.

எழுத்து,
மங்கை அரசி.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.

தஞ்சை கோவிலின் தலையில் அஸ்திவாரம்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் பிப்ரவரி 5 ஆம் திகதி குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. ( திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.)

1980 மற்றும் 1997 ஆகிய வருடங்களில் உரிய முறைப்படி சிறப்பாக நடந்ததாக அறியப்படுகின்றது. 23 ஆண்டுகளிற்கு பிறகு இந்த வருடம் பிப்ரவரி 5ஆம் திகதி கும்பாபிஷேகம் நடக்கிறது இதற்காக ஜனவரி 27 முதல் பூர்வாங்க பூஜைகள் நடந்து சிறப்பு பூஜைகள் நடந்து யாகசாலை பிரவேசம் யாகாரம்பம் முதல் காலயாக பூஜை, ஜபம், ஹோமம், பூரணாஹுதி தீபாராதனை போன்றவை நடந்திருக்கின்றன. யாகசாலை பூஜைக்காக நாட்டின் முக்கிய நதிகளான கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவிற்காக தஞ்சை பெரிய கோவிலின் பின்புறமாக 11 ஆயிரத்து 900 சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பந்தலில் 8 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கூடிய உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சுழல் மேசையுடன் கூடிய ஏணி பொருத்தப்பட்ட அதிநவீன வாகனம் பின்லாந்து நாட்டில் இருந்து 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, மூலவர் விமான கோபுரத்தின் பின்புறம் நிறுத்தப்பட்டுள்ளது. நீரியல் அழுத்தத்தில் செயற்படக்கூடிய இந்த வாகனம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியை செய்யக்கூடியது. மூலவர் விமானக் கோபுரம் 216 அடி உயரமுடையது. கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள், ஓதுவார்களுடன் தீயணைப்பு வீரர்களும் செல்லவுள்ளனர். தேவை ஏற்படின் சுழல் மேசையுடன் கூடிய ஏணியின் உதவியுடன் கீழே இறக்க முடியும். தண்ணீரை பீச்சி அடிக்கும் வசதியும் இந்த வாகனத்தில் உண்டு. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை நகரில், வானத்தைத் தொடும் அளவு உயரமாக எம்மை அண்ணாந்து பார்க்க வைப்பது தஞ்சை பெரியகோவில். உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இதை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இக்கோவிலை சிறப்பாக பாதுகாத்து பராமரித்து வருவது மத்திய தொல்லியல்த் துறை.

இந்தக் கோவிலிற்கு தஞ்சை பெரிய கோவில், தஞ்சை பெருவுடையார் கோவில், பிரகதீஸ்வரர் கோவில், ராஜராஜேஸ்வரம் என பல பெயர்கள் உள்ளது. இதைக் கட்டிய அரசனுக்கும் ராஜராஜசோழன், அருண்மொழிவர்மன், மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், திருமுறைகண்ட சோழன் என பல பெயர்கள் உண்டு. தஞ்சை பெரிய கோவிலின் கோபுர உச்சியை உற்றுப்பார்த்தால், பிரமாந்திரக்கல் எனப்படும் ஸ்தூபிக்கல் தெரியும். இதன் எடை 80 டன். இந்தக் கல்லை தாங்கும் சதுரவடிவக் கல்லும் 80 டன் கொண்டது. அந்தச் சதுர கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டாக எட்டு நந்திகளும் ஒவ்வொன்றும் 10 டன் எடை கொண்டதாக, 80 டன் எடையுடன் உள்ளது. இந்த மூன்று 80டன்களும் இந்த பெரியகோவிலின் அஸ்திவாரம். அஸ்திவாரம் அடியில் தான் இருக்கும். ஆனால் இந்த விந்தை இங்கு மட்டுமே உள்ளது. எப்படியெனில் நாம் செங்கற்களை வைத்து வீடு கட்டும்போது கட்டடத்தின் உயரம் 12 அடி என்றால், நான்கு அடிக்காவது அஸ்திவாரம் போட வேண்டும் பெரிய கோவிலின் உயரம் 216 அடி ஆதலால் 50 அடி ஆழம் 50 அடி அகலமாக அஸ்திவாரம் அமைக்க சாத்தியமில்லை. ஏனெனில் 50 அடி ஆழத்தில் தண்ணீர் வந்துவிடும் ஆனால் பெரிய கோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடி மட்டும் தான்.

இங்கு சோழர்களின் அறிவியல் மேம்பாடு தெளிவாக தெரிகின்றது. இலகு இணைப்பு மூலம் கற்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல் இணைப்பிற்கும் இடையில் நூலளவு இடைவெளி விட்டு அடுக்கினர். கிராமங்களில் உபயோகிக்கப்படும் கயிற்றுக் கட்டிலில் கயிறுகளின் பிணைப்பு லூசாக தாழ்ந்திருக்கும் அதன் மேல் மனிதர்கள் ஏறி அமரும்போது அனைத்தும் உள்வாங்கி இறுகிவிடும் கயிறுகளின் பிணைப்பு பலமாகிவிடும். இந்த அடிப்படையில் லூசாக கற்களை அடுக்கி சென்று உச்சியில் பிரம்மாண்டமான எடையை அழுத்தச் செய்வதன் மூலம் மொத்த கற்களும் இறுகி மிகப் பலமான இணைப்பாக உருவாகின்றது. கோவிலின் உச்சியில் அஸ்திவாரம் இடம்பெற்ற அதிசயம் இதுதான். எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்தக் கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலையாக நிற்கும். சூரிய சந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும் என்று அன்று சோழன், ராஜராஜ மன்னனின் நம்பிக்கை பொய்க்காது என்பது இன்றுவரை நிரூபணமாகி உள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழனின் வீரத்தையும், பக்தியையும், கலை நேர்த்தியையும், அறிவியலையும் பிரதிபலிக்கும் வரலாற்றுக் களஞ்சியமான தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு நீடித்து நின்று நம் சந்ததியினரும் அதன் பெருமையுணர நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

எழுத்து,
மங்கை அரசி.